'தமிழக கவர்னரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்' - தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு


தமிழக கவர்னரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம்  - தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு
x

தமிழக கவர்னரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை(வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவர விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்காக நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "விலைவாசி உயர்வை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மணிப்பூர், விவகாரம், பொது சிவில் சட்டம், ஒடிசா ரெயில் விபத்து ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.


Next Story