மத்திய அரசின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிப்பு

அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக 'ஆசாதி கா அம்ரித் மகோத்வ்' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில், இந்த வாரம் அமிர்தப் பெருவிழா வாரமாக கொண்டாடப்படுகிறது.
இதன்படி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை சார்பில், நாளை (ஜூன் 8-ந்தேதி} போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாளைய தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாடு முழுவதும் 14 இடங்களில், 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்படுகிறது.
கவுகாத்தி, லக்னோ, மும்பை, முந்த்ரா, கண்ட்லா, பாட்னா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருட்கள் நாளை அழிக்கப்பட உள்ளது. இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.