ஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு


ஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு
x

ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

புவனேஸ்வர்,

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரெயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரெயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரெயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு பணிகள் குறித்த நிலவரங்களை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆய்வு செய்தார்.

அதே சமயம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது என்றும், 900 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கோரமான ரெயில் விபத்து காரணமாக ஒடிசாவில் இன்று ஜூன் 3-ந்தேதி, மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதையடுத்து ஒடிசாவில் இன்று அரசு சார்பில் நடைபெற இருந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story