சிவசேனா மந்திரிகளில் ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரேவுடன் உள்ளார்


சிவசேனா மந்திரிகளில் ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரேவுடன் உள்ளார்
x

கோப்புப்படம்

சிவசேனா மந்திரிகளில் ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரேவுடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக கடந்த 20-ந்தேதி நள்ளிரவு ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து அவர், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தி சென்று அங்குள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் 12 முதல் 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களே இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் படிப்படியாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தனர். இதில் நேற்று மாநில உயர் கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த், ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார்.

இவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்த 9-வது சிவசேனா கேபினட் மந்திரி ஆவார். தற்போது சிவசேனா சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான கேபினட் மந்திரிகளில், ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரேவுடன் உள்ளார்.

மற்ற கேபினட் மந்திரிகளான அனில் பரப், சுபாஷ் தேசாய் ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர். இதில் அனில் பரப் அமலாக்கத்துறை பிடியில் உள்ளார். சுபாஷ் தேசாயின் எம்.எல்.சி. பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது.


Next Story