உடுப்பியில் தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.3½ லட்சம் மோசடி
![உடுப்பியில் தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.3½ லட்சம் மோசடி உடுப்பியில் தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.3½ லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/07/1492396-mosadi02.webp)
உடுப்பியில் தொழிலாளியிடம் ஆன்லைன் மூலம் ரூ.3½ லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு-
உடுப்பியில் தொழிலாளியிடம் ஆன்லைன் மூலம் ரூ.3½ லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீடு வாடகைக்கு
உடுப்பி மாவட்டம் பிரம்மகிரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். தொழிலாளி. இவருக்கு சொந்தமான வீடு அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் அந்த வீ்ட்டை வாடகைக்கு விட சதீஷ் முடிவு செய்தார். அதன்படி சதீஷ் வீடு வாடகைக்கு விடுவதாக சமூகவலைதளத்தில் விளம்பரம் செய்தார்.
இந்தநிலையில் விளம்பரத்தை பார்த்த மர்மநபர் ஒருவர் சதீஷ் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில், தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் எனவும் அதற்கு தற்போதே ஆன்லைன் மூலம் முன்பணம் அனுப்புகிறேன் என கூறினார்.
இதனை நம்பிய சதீஷ் மர்மநபருக்கு தனது வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைத்தார். பின்னர் மர்மநபர் சதீசிற்கு தொடர்பு கொண்டு உங்களது செல்போன் எண்ணிற்கு வந்திருக்கும் ஓ.டி.பி. எண்ணை சொல்லுங்கள் என கூறினார். இதையடுத்து சதீஷ் மர்மநபருக்கு ஓ.டி.பி. எண்ணை கூறினார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
அப்போது சதீஷ் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மர்மநபரை தொடர்பு கொண்டார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் உடுப்பி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தொடர்புடைய மர்ம நபரையும் தேடி வருகிறார்கள்.