சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி


சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி
x

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர், 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 15-ந் தேதி சித்திரை விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு அய்யப்ப சாமிக்கு முன் விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். அதைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை அய்யப்ப பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.

அதன் பிறகு 19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.




Next Story