கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை


கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2022 3:32 AM GMT (Updated: 1 Sep 2022 3:36 AM GMT)

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவம் மழை பெய்ய தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளா மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்படும்.

அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 நாட்கள் கன மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய, கேரள அரசு, தீயணைப்புத்துறை, மின் துறை மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story