உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி


உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி
x
தினத்தந்தி 27 Sep 2022 7:00 PM GMT (Updated: 27 Sep 2022 7:00 PM GMT)

கடூர் அருகே விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்த மாணவியின் குடும்பத்துக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.

சிக்கமகளூரு;

மூளைச்சாவு

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளி தாண்டியா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு ரக்‌ஷிதா பாய் என்ற மகள் இருந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரக்‌ஷிதா பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சில் ஏறும் போது தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய இதயம் உள்பட 9 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இதில் ரக்‌ஷிதாவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மேலும் மற்ற உடல் உறுப்புகளும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதனால் 9 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

ரூ.7 லட்சம் நிவாரணம்

இதையடுத்து 9 உடல் உறுப்புகளை தானம் செய்த ரக்‌ஷிதாவின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சிக்கமகளூரு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மோகன் தெரிவித்திருந்தார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு அமைப்பினரும் நிவாரணம் வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சோமனஹள்ளி கிராமத்தின் ரக்‌ஷிதாவின் வீட்டிற்கு சென்ற மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ், முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவராணத்திற்காக காசோலையை மாணவியின் குடும்பத்திற்கு வழங்கினார்.

மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.2 லட்சத்தையும் வழங்கினார். இந்த சமயத்தில் அவருடன் மாவட்ட கலெக்டர் ரமேஷ், கடூர் தொகுதி எம்.எல்.ஏ. பெல்லி பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story