'இந்திய அரசு அழுத்தம்' டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு


இந்திய அரசு அழுத்தம் டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 5:07 AM GMT (Updated: 13 Jun 2023 5:34 AM GMT)

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போரட்டத்தின் போது டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததது என அந்த நிறுவனத்தின் முன்னாள் சிஇஒ விமர்சித்து இருந்தார்.

புதுடெல்லி,

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனபின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் போது இந்திய அரசு டுவிட்டருக்கு அழுத்தம் கொடுத்ததாக அதன் முன்னாள் சிஇஒ ஜாக் டோர்சி கூறியது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

ஜாக் டோர்சி கூறுகையில், "இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை சுற்றியும், அப்போது அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சுற்றியும் எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தன. விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள டுவிட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் எனக்கூறி அதை செய்தார்களும் கூட; இத்துடன் டுவிட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன" என்றார்.

இந்த நிலையில், டுவிட்டர் சிஇஓவின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், " ஜாக் டோர்சியின் அப்பட்டமான பொய் இது. டுவிட்டர் வரலாற்றின் மிகவும் சந்தேகத்திற்குரிய காலத்தை துடைத்தெறியும் முயற்சியாக இது இருக்கலாம்" என்று சாடியுள்ளார்.


Next Story