மங்களூரு பல்கலைக்கழக விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட கூடாது சபாநாயகர் யு.டி.காதர் பேட்டி


மங்களூரு பல்கலைக்கழக விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட கூடாது  சபாநாயகர் யு.டி.காதர் பேட்டி
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:47 PM GMT)

மங்களூரு பல்கலைக்கழக விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட கூடாது என சபாநாயகர் யு.டி.காதர் கூறினார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் யு.டி.காதர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகத்தில் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கடந்த 3 ஆண்டுகளாக மங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கு பல்கலைக்கழகம் சார்பில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இதில் வெளிநபர்கள் தலையிடக்கூடாது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி மங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக அதன் நிர்வாகமே முடிவு எடுக்கும். மங்களூரு பல்கலைக்கழகத்திற்கு பி கிரேடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்குவதில்லை என புகார் வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்ைக எடுக்கப்படும். பல்கலைக்கழக விடுதியில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை மதசார்பின்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 3 ஆண்டுளாக தான் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மங்களூரு பல்கலைக்கழகம் சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். பல்கலைக்கழக விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சபாநாயகர் யு.டி.காதர் கூறினார்.


Next Story