குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம்: பிரதமர் மோடிக்கு எதிராக உள்நோக்கம் கொண்டது; முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கண்டனம்


குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம்: பிரதமர் மோடிக்கு எதிராக உள்நோக்கம் கொண்டது; முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கண்டனம்
x

குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. வெளியிட்டுள்ள ஆவணப்படம், பிரதமர் மோடிக்கு எதிரான உள்நோக்கம் கொண்டது என முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் அடங்கிய குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியா கண்டனம்

பிரதமர் ேமாடி குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது, அங்கு கடந்த 2002-ம் ஆண்டு மிகப்பெரிய கலவரம் மூண்டது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த கலவரம் தொடர்பாக லண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனம் 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி சமீபத்தில் வெளியானது. 2-வது பகுதி, 23-ந் தேதி வெளியாகிறது.

இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

302 பேர் அறிக்கை

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பி.பி.சி.க்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் நீதிபதிகள், சிவில் சர்வீஸ் அதிகாரிகள், வல்லுனர்கள் என 302 பேர் அடங்கிய குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பி.பி.சி.யின் ஆவண தொடர், நாம் இதுவரை பார்த்தவற்றிலிருந்து, வெளிப்படையாகவே தலைகீழான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அது மட்டுமின்றி 75 ஆண்டுகால இந்தியாவின் சுதந்திரமான, ஜனநாயகக் கட்டமைப்பின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்திய மக்களின் விருப்பப்படி செயல்படும் ஒரு தேசத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.

பாரபட்சம் நிறைந்தது

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மறுமலர்ச்சியின் மாயைகள் இந்த முறை இல்லை. எங்கள் தலைவரிடம் இல்லை, இந்தியாவிடம் இல்லை. எங்கள் கண்ணெதிரில் இல்லை.

இந்த ஆவணப்படம் எங்கள் தலைவரும், சக இந்தியரும், தேசபக்தருமான பிரதமர் மோடி மீது உள்நோக்கத்துடன் திரிபுபடுத்தப்பட்ட குற்றப்பத்திரிகை ஆகும். சாயம் பூசப்பட்ட எதிர்மறை மற்றும் தளராத பாரபட்சம் நிறைந்தது.

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடியின் எந்தப் பங்கையும் இந்திய சுப்ரீம் கோர்ட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரித்துள்ளது. இந்த முக்கிய உண்மையை முற்றிலுமாக புறக்கணித்ததன் மூலம் இது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தேவையில்லை

இந்தியாவுக்கு காலனித்துவ, ஏகாதிபத்திய வெளிநபர்கள் தேவையில்லை என்பதை பி.பி.சி.க்கு தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது. பிரித்தாளும் அரசியலை மேற்கொண்ட நீங்கள், எப்படி ஒன்றாக வாழ வேண்டும் என்று இந்தியர்களுக்கு விளக்க வேண்டாம். உள்ளடக்கம் என்பது இந்தியாவில் இயல்பாகவே உள்ளது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையில் 13 முன்னாள் நீதிபதிகள், 133 முன்னாள் அதிகாரிகள், 156 வல்லுனர்கள் கையெழுத்து போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story