வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி: வடக்கு ராணுவ தளபதி உபேந்திரா


வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி:  வடக்கு ராணுவ தளபதி உபேந்திரா
x
தினத்தந்தி 13 Sep 2023 9:24 AM GMT (Updated: 13 Sep 2023 10:52 AM GMT)

வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது என வடக்கு ராணுவ தளபதி உபேந்திரா கூறியுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில், வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ரஜோரி என்கவுண்ட்டரின்போது இந்திய ராணுவத்தின் கென்ட் என்ற பெண் மோப்ப நாய் உயிரிழந்து உள்ளது. அது, ஜம்மு பகுதியில் தன்னுடைய பயற்சியாளரின் உயிரை பாதுகாக்கவும் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து வீரர்கள் தப்பிக்கவும் உதவியுள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி இடையூறு ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இந்த ஆண்டில் 2.25 கோடி சுற்றுலாவாசிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடைபெறாமல் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற நாங்கள் விடமாட்டோம் என கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு நேற்று சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலின்போது, தப்பியோடிய பயங்கரவாதிகளை படை வீரர்கள் துரத்தி சென்றனர். அவர்களுக்கு முன்னால், லேபரடார் வகையை சேர்ந்த ராணுவத்தின் பெண் மோப்ப நாய் கென்ட் (வயது 6) சென்றுள்ளது.

அப்போது, பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கி சூட்டின்போது, கென்ட் முன்னே பாய்ந்து உயிரிழந்தது. தன்னுடைய பாதுகாவலரை பாதுகாக்கும் வகையில் அது உயிர் தியாகம் செய்தது. இதனால், அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வீரர்கள் உயிர் தப்பினர் என்று ஜம்மு பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story