நாடாளுமன்ற விவகாரம் - பாஜக எம்.பியிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு


நாடாளுமன்ற விவகாரம் - பாஜக எம்.பியிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு
x

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களில் ஒருவருக்கு பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா அனுமதி சீட்டு வழங்கியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 13-ந்தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில், மதியம் ஒரு மணிக்கு நேரமில்லா நேர நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து, இரு இளைஞர்கள் குதித்து, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை எடுத்து வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியே வந்தது. ஒருவர், உறுப்பினர்கள் இருக்கைகளில் தாவித் தாவி குதித்து ஓடினார்.

இருவரும் சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம், ஜெய்பீம், ஜெய் பாரத் என்று உரத்த குரலில் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாதுகாப்பு படையினரும் பிடித்தனர். அவர்களைப்போல, வெளியேயும் ஒரு 42 வயது பெண்ணும், 25 வயது ஆணும் புகைக் குப்பிகளை வீசி கோஷங்கள் எழுப்பினர்.

அவர்கள் 4 பேர் மீதும் தீவிரவாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களில் ஒருவரிடம் இருந்த நுழைவுக்கான அனுமதி சீட்டில் சாகர் சர்மா என அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவருக்கு பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா அனுமதி சீட்டு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம் பெற டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளரிடம் விசாரணை நடத்த சிறப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story