செயலற்ற அரசு; பீகாரை பற்றி நிதிஷ் குமார் முதலில் கவலைப்படட்டும்: பிரசாந்த் கிஷோர் அதிரடி தாக்கு


செயலற்ற அரசு; பீகாரை பற்றி நிதிஷ் குமார் முதலில் கவலைப்படட்டும்:  பிரசாந்த் கிஷோர் அதிரடி தாக்கு
x

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து வரும் சூழலில், பீகாரை பற்றி முதலில் அவர் கவலைப்படட்டும் என பிரசாந்த் கிஷோர் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் சந்தித்து பேசி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இந்த சூழலில், மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை, நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு பற்றி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடையே பேசும்போது, நான் நிதிஷ் குமாரிடம் ஒரேயொரு வேண்டுகோள் வைத்தேன். பீகாரில் இருந்து ஜெயபிரகாஷ்ஜியின் இயக்கம் தொடங்கியது.

பீகாரில் நாம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால், அடுத்து செல்வது பற்றி முடிவு செய்யலாம் என கூறினேன். முதலில், நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு தரவேண்டும். எனக்கு எந்தவித மறுப்பும் இல்லையென்று முன்பே கூட நான் தெரிவித்து இருக்கிறேன்.

பா.ஜ.க. பூஜ்யம் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம். ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் அவர்கள் ஒரு பெரிய கதாநாயகராக உருவாகி இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.

இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதிஷ் குமார் கூறும்போது, இந்த சந்திப்பின்போது, குறிப்பிடும்படியாக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது பற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வருகிறோம்.

அடுத்து என்ன விசயங்கள் செய்யப்பட்டாலும், அது தேச நலனிற்காகவே இருக்கும். தற்போது ஆட்சி செய்து வருபவர்கள், செய்வதற்கு எதுவும் இல்லை. அவர்கள் சொந்த விளம்பரத்திற்கான விசயங்களையே செய்து கொண்டிருக்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யப்படவில்லை என கூறினார்.

இந்த நிலையில், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடையே இன்று பேசும்போது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முயன்றார் என குறிப்பிட்டார். எனினும், அதில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்தித்து வரும் சூழலில் பிரசாந்த் கிஷோர் கூறும்போது, பீகாரை பற்றி முதலில் நிதிஷ் குமார் கவலைப்படட்டும். பீகார் செயலற்ற அரசாக முடங்கி போயுள்ளது என பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து அவர் கூறும்போது, தேஜஸ்வி யாதவ் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பேசும்போது, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறினார். அவரால் அப்படி 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது என்று ஒவ்வொருவருக்கும் தெரியும்.

லாலு பிரசாத்தின் மகனாக தேஜஸ்வி யாதவ் இல்லையென்றால், நாட்டில் அவருக்கு என்ன வேலை கிடைத்து இருக்கும்? என்றும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story