பள்ளி பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு


பள்ளி பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு
x

பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூகப் பணிகள் குறித்த பாடத்தை 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது அமைக்கப்பட்ட பாடநூல் மறுஆய்வுக் குழு, மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த புரட்சிகர எழுத்தாளர்கள் கிரிஷ் கர்னாட், பி.லங்கேஷ், தேவனூர் மகாதேவா, நாகேஷ் ஹெக்டே ஆகியோரின் படைப்புகளையும், சீர்திருத்தவாதிகள் சாவித்திரிபாய் பூலே, பெரியார் உள்ளிட்டோர் குறித்த பாடங்களையும் நீக்கியது.

இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம், கர்நாடக மாநில பள்ளிக்கல்வி திட்டத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் 18 முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தது.

மேலும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக பேராசிரியர் மஞ்சுநாத் தலைமையில் பாடநூல் மறுஆய்வுக் குழுவை காங்கிரஸ் அரசு அமைத்தது. இதன்படி அரசியல் அமைப்பு, பாலியல் உணர்திறன், குழந்தைகள் உரிமைகள், ஜனநாயகம், மதசார்பின்மை, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் தீவிர சீர்திருத்தவாதிகளாக பார்க்கப்படும் சாவித்திரிபாய் பூலே, பெரியார் ஆகியோரின் பாடங்களை மீண்டும் சேர்க்க கர்நாடக கல்வித்துறைக்கு ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூகப் பணிகள் குறித்த பாடத்தை 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியார் குறித்த பாடத்தை கர்நாடக கல்வித்துறை சேர்க்க இருக்கிறது. எதிர்வரும் கல்வி ஆண்டில் இந்த பாடங்கள் பள்ளி புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story