11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு


11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
x

குஜராத் அரசால் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, மகுவா மொய்த்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் குஜராத் அரசால் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் விடுதலை குறித்து மராட்டிய அரசு தான் முடிவு செய்யலாமே தவிர குஜராத் அரசு முடிவு செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story