நாளைய அரசியல் கல்வியைச் சுற்றியே இருக்கும் : சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்


நாளைய அரசியல் கல்வியைச் சுற்றியே இருக்கும் : சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்
x

கோப்புப்படம்

இன்று சிறை அரசியலே மேலோங்கி இருக்கிறது, ஆனால் நாளைய அரசியல் கல்வியைச் சுற்றியே இருக்கும் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ கடந்த பிப். 26ஆம் தேதி தெரிவித்திருந்தது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணைக்கு பின் சிபிஐ, சிசோடியாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து அவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில் மணீஷ் சிசோடியாவிடம் சிறையில் வைத்து இன்று இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "டெல்லியின் கல்வி அமைச்சராகப் பணியாற்றியபோது, தேசிய மற்றும் மாநில அளவில் ஆட்சியைப் பிடித்த தலைவர்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யாதது ஏன் என்ற கேள்வி என் மனதில் பலமுறை எழுந்தது.

சில நாட்களாக சிறையில் இருக்கும் எனக்கு இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்து வருகிறது. குழந்தைகளுக்கு சிறந்த தரமான கல்வி வழங்குவதைக் காட்டிலும் அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையிலடைப்பது மிகவும் எளிதான காரியம். பாஜகவின் பிரச்னை கல்வி சார்ந்த அரசியலே.

அவர்கள் தேசத்தினை உருவாக்க நினைக்கிறார்கள், தலைவர்களை அல்ல. கல்வி சார்ந்த அரசியல் என்பது எளிதான காரியமல்ல. அரசியல் ஆதாயத்துக்கான விஷயமும் கிடையாது.

பாஜக அல்லாத மற்றும் காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் கல்வி குறித்த அனுபவங்கள் மற்றும் சோதனைகளில் இருந்து ஒன்றையொன்று கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்கள் கூட, அரசுப் பள்ளிகள் மோசமாக நிர்வகிக்கப்படுவதால், தொலைக்காட்சியில் கல்வியை விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இன்று பாஜக ஆட்சியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கும் அரசியல் வெற்றி பெறலாம். ஆனால், எதிர்காலம் கல்வி சார்ந்த அரசியலுக்கானதாகும் என்று அதில் தெரிவித்துள்ளார்.


Next Story