ராகுல் காந்தி பாதயாத்திரை ஒத்தி வைப்பு; வேட்பு மனு தாக்கலுக்காக டெல்லி பயணம்


ராகுல் காந்தி பாதயாத்திரை ஒத்தி வைப்பு; வேட்பு மனு தாக்கலுக்காக டெல்லி பயணம்
x

ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை ஒத்தி வைத்து விட்டு கட்சி தலைமை பதவிக்கான வேட்பு மனு தாக்கலுக்காக டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.


புதுடெல்லி,



காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருகிற அக்டோபர் 17-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற காங்கிரஸ் மூத்த தலைவர்களும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, சசி தரூர், அசோக் கெலாட், மணீஷ் திவாரி உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கான களத்தில் இறங்க கூடும் என கூறப்பட்டு வருகிறது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ள யாரும் போட்டியிடலாம். அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இதுவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் உறுதியான நிலை. இது ஒரு வெளிப்படையான, ஜனநாயக மற்றும் திறந்த நிலையிலான நடைமுறை. தேர்தலில் போட்டியிட யாரும், யாருடைய ஒப்புதலையும் பெற வேண்டியதில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையானது கேரளாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 29-ந்தேதி கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்குள் யாத்திரை பயணிக்க தொடங்கும்.

எனினும், வேட்பு மனுவுக்கான இறுதி நாள் செப்டம்பர் 30 என அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி நோக்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருந்து ராகுல் காந்தி திரும்பமாட்டார் என்றும் அதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடமாட்டார் எனவும் கடந்த செவ்வாய் கிழமை காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை ஒத்தி வைத்து விட்டு கட்சி தலைமை பதவிக்கான வேட்பு மனு தாக்கலுக்காக டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என நெருங்கிய கட்சி வட்டாரங்கள் இன்று தெரிவித்து உள்ளன.

இதன்பின்பு ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் வருகிற 24-ந்தேதி முதல் மீண்டும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடர உள்ளனர். கட்சி வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வரும் அக்டோபர் 8-ந்தேதி வெளியிடப்படும். இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், டெல்லியில் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேச கூடும் என்றும் கூறப்படுகிறது.


Next Story