டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு


டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த 2-வது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012-ல் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

இந்நிலையில் திரவுபதி முர்முவின் மெட்ரோ ரெயில் பயணம் குறித்து ஜனாதிபதி மாளிகை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார். தனது பயணத்தின்போது அவர் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று டெல்லி மத்திய செயலக மெட்ரோ நிலையம் (கேட் எண் 4) மற்றும் அம்ரித் உதயான் (கேட் எண் 35) இடையிலான பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் மெட்ரோ ரெயிலில் ஏறிய அவர், நேரு பிளேஸ் மெட்ரோ நிலையம் வரை பயணித்து பின்னர் மத்திய செயலகத்திற்குத் திரும்பினார்.

இந்த பயணத்தின்போது டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனர் விகாஸ் குமார் ஜனாதிபதியுடன் இருந்தார். ஜனாதிபதி என்.சி.எம்.சி.(National Common Mobility Card) பயண அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

தொடர்ந்து தனது பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் கருத்து பதிவிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, டெல்லி மெட்ரோ நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், தனது பயணம் இனிமையாக இருந்ததாகாவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story