நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
x

ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த 3 மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டமாகிறது.

புதுடெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்ற நிலைக்குழு (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதுவரை இருந்த குற்றவியல் சட்ட மசோதாக்கள், ஆங்கிலேய மனப்பான்மையை பிரதிபலிப்பவையாக இருந்ததாகவும், இந்திய மனப்பான்மையை பிரதிபலிக்கும் விதமாக இந்த 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களும் இருக்கும் என்றும் நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்து இருந்தார்.

நாடாளுமன்றத்தில் பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். தொடர்ந்து இந்த 3 மசோதாக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த மசோதாக்கள் ஜனாதிபதி ஓப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த 3 மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டமாகிறது.


Next Story