தசரா, ஆயுதபூஜைையயொட்டி பெங்களூருவில் காய்கறி, பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


தசரா, ஆயுதபூஜைையயொட்டி பெங்களூருவில் காய்கறி, பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

ஆயுதபூஜை, தசரா விழாவையொட்டி பெங்களூருவில் காய்கறிகள், பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூரு:

கூட்டம் அலைமோதியது

கர்நாடகத்தில் நவராத்திரி, தசரா விழாவையொட்டி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் பூ, காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் ஒருங்கிணைந்த மையமாக கே.ஆர்.மார்க்கெட் உள்ளது.

இந்த நிலையில் கே.ஆர்.மார்க்கெட்டில் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று காய்கறிகள் உள்பட பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. நவராத்திரி, தசரா, ஆயுதபூஜையையொட்டி பெங்களூருவில் காய்கறிகள், பூக்கள், காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000

நேற்று தக்காளி ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.55 வரை விற்கப்பட்டது. இதேபோல் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் தரத்திற்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.65 வரை விற்கப்பட்டது. கத்திரிக்காய் மற்றும் தேங்காய் போன்றவை கிலோ ரூ.40 முதல் ரூ.60-க்கு விற்கப்பட்டது. சின்ன மற்றும் பெரிய வெங்காயம் 3 மற்றும் 5 கிலோ வீதம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.

மேலும் பீன்ஸ், உருளை உள்ளிட்ட காய்கறிகள் ஒரு கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டது. மேலும், தடியங்காய் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. பழங்களை பொறுத்தமட்டில், ஆப்பிள் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரைக்கும், ஆரஞ்சு ரூ.80 முதல் ரூ.120-க்கு விற்கப்பட்டது. பிற பழங்களின் விலை மற்ற நாட்களை போல் இருந்தது.

மேலும் பூக்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரோஜாப்பூ கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரையும், சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது.

கொரோனா காரணமாக...

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தசரா, நவராத்திரி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர், தற்போது கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் காய்கறிகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அதன்படி வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டவரப்பட்டு, பெங்களூருவில் விற்கப்படுகிறது. காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் அந்த அளவிற்கு விற்பனை இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்றும், நாளையும் கே.ஆர். மார்க்கெட் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் காரணத்தால் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story