ஜம்முவில் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி


ஜம்முவில் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
x

பிரதமர் மோடி வருகையையொட்டி, ஜம்முவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு,

பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜம்மு சென்றார். ஜம்முவில் மவுலானா ஆசாத் ஸ்டேடியத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரெயில், சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையது ஆகும்.

மேலும், ஐ.ஐ.டி. ஜம்மு, ஐ.ஐ.டி. பிலாய், ஐ.ஐ.டி. திருப்பதி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களையும், கேந்திரிய வித்யாலயாக்களுக்கு 20 புதிய கட்டிடங்களையும் மற்றும் நவோதலயா வித்யாலயாக்களுக்கு 13 புதிய கட்டிடங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிதாக அரசு பணியில் சேர்ந்த 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார். இதன் பின்னர் "விக்சித் பாரத் விக்சித் ஜம்மு" என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட பயனாளிகளுடன் பிரதமர் உரையாற்றி வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் ஜம்முவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story