ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட்


ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட்
x
தினத்தந்தி 8 Jun 2022 4:33 PM GMT (Updated: 8 Jun 2022 5:03 PM GMT)

ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக தொடர்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்த பயனுள்ள விவாதத்திற்கு வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியனை வரவேற்பதில் மகிழ்ச்சி. நமது உறவுகள் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளித்து, பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழுமையை மேம்படுத்தியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story