தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு..!


தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு..!
x

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வ.உ.சி. துறைமுகம்

குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை, மிகச்சிறந்த உட்கட்டமைப்பு, சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் செயல்படுத்தி வருகிறது. இதனால் தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் துறைமுகாக வ.உ.சி. துறைமுகம் விளங்கி வருகிறது.

இலக்கை எட்டி சாதனை

இந்த நிலையில், சரக்குகளை கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இலக்கை எட்டி சாதனை மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்துக்கு 2022-23-ம் நிதியாண்டில் 36 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை வ.உ.சி. துறைமுகம் 17 நாட்களுக்கு முன்னதாகவே எட்டி சாதனை படைத்து உள்ளது. இதுவரை 36.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 11.35 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

இந்த துறைமுகத்தில் கட்டுமானபொருட்கள் 67.41 சதவீதமும், என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரி 63.16 சதவீதமும், சுண்ணாம்புக்கல் 51.72 சதவீதமும், கந்தக அமிலம் 37.34 சதவீதமும், பாமாயில் 35.55 சதவீதமும், தொழிலக கரி 25.08 சதவீதமும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி 12.80 சதவீதமும் கையாளப்பட்டு உள்ளன.

உறுதுணை மேலும் எளிமையான வர்த்தகத்துக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அதிகரித்துள்ள உள்நாட்டு சரக்கு போக்குவரத்து, மொத்த சரக்கு பெட்டக பரிமாற்றம், பெரியவகை சரக்கு பெட்டக கப்பல்களின் வருகை, சரக்குத்தள முன்னுரிமை திட்டம், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் துறைமுக வாடிக்கையாளர்களை தக்கவைத்தல் ஆகியவை வ.உ.சி. துறைமுக ஆணையம் இந்த சாதனை புரிவதற்கு பெரிதும் உறுதுணையாக அமைந்தது.

மேலும் இந்த துறைமுகம், அனைத்து வகையான சரக்குகள் கையாளுதலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை புரியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு

இந்நிலையில், சரக்குகளை கையாளுவதில் சாதனை படைத்த தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "நல்லது! இந்தியாவின் துறைமுகத்துறை வேகமாக வளர்ந்து பொருளாதார முன்னேற்றத்துக்குப் பங்களிக்கிறது" என்று பதிவிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக டுவிட்டரை சேர்த்துள்ளார்.


Next Story