மடிகேரியில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்


மடிகேரியில்  சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:46 PM GMT)

மடிகேரி, விராஜ்பேட்டையில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

குடகு-

மடிகேரி, விராஜ்பேட்டையில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

குண்டும், குழியுமான சாலை

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை நாபொக்லூவை அடுத்த பாலமாரி-பரனே கிராமத்திற்கு செல்லும் சாலைகளை இணைக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த 2 கிராமத்திற்கும் செல்லும் சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்துபோது, வாகனங்கள் விபத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் மழை நேரங்களில் வாகனங்கள் சென்றால் சேற்றில் சிக்கி கொள்கின்றன. அதன் பின்னர் வாகனங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதேபோல பொதுமக்களும் அந்த சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த சாலைகளை சீரமைக்கவேண்டும் என்று விராஜ்பேட்டை தாலுகா நிர்வாகம் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் தாலுகா நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மேம்பாலப்பணிகள் நடப்பதால் சாலைகளை சீரமைக்க காலதாமதம் ஏற்படுவதாக அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நாபொக்லு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நகரசபையை முற்றுகையிட்டு போராட்டம்

இதேபோல மடிகேரி டவுன் பகுதியிலும் சில சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலைகளை சீரமைக்கும்படி பொதுமக்கள் மடிகேரி தாலுகா நிர்வாக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் தாலுகா நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மடிகேரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் கன்னட அமைப்பினர் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து மந்தர்கவுடா எம்.எல்.ஏ.விற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் மடிகேரி தாலுகாவில் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

உடனே அதை சீரமைத்து கொடுக்கவேண்டும் என்று கூறினர்.

அதை கேட்ட மந்தர் கவுடா எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story