பி.யூ.சி. மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


பி.யூ.சி. மாணவி பலாத்கார வழக்கில்  வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 8 Aug 2023 6:45 PM GMT (Updated: 8 Aug 2023 6:46 PM GMT)

பி.யூ.சி. மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மங்களூரு-

பி.யூ.சி. மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பி.யூ.சி. மாணவி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தாள். இந்தநிலையில் ஜப்பினமுகரு பகுதியை சேர்ந்த ரோஷன் டிஜோசா (வயது 31), மாணவி கல்லூரிக்கு செல்லும்போது அவளிடம் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் மாணவியை ரோஷன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவியை மங்களூருவுக்கு ரோஷன் அழைத்து சென்றார். அங்கு விடுதியில் அறை எடுத்து 2 பேரும் தங்கினர். அப்போது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ரோஷன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து யாரிடம் சொல்லக்கூடாது என மாணவியை அவர் மிரட்டி உள்ளார்.

வாலிபர் கைது

மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை, ரோஷன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சில நாட்களாக மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் கேட்டனர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். மேலும் தங்க நகைகளை என்னிடம் இருந்து ரோஷன் ஏமாற்றி வாங்கியதாகவும் மாணவி கூறினார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் உல்லால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு மங்களூரு கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. உல்லால் போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

3 ஆண்டு சிறை

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி மஞ்சுளா ஹிட்டி நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார். அதில் பி.யூ.சி. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ரோஷனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story