பஞ்சாப்: குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு - கான்ஸ்டபிள் உயிரிழப்பு


பஞ்சாப்: குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு - கான்ஸ்டபிள் உயிரிழப்பு
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 17 March 2024 11:06 AM GMT (Updated: 17 March 2024 11:07 AM GMT)

போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு குற்றவாளி சுக்வீந்தர் சிங் அங்கிருந்து தப்பியோடினார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இருந்து சுமார் 66 கி.மீ. தொலைவில் உள்ள மன்சூர்பூர் என்ற கிராமத்தில், சுக்வீந்தர் சிங் என்ற நபர் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த கிராமத்திற்குச் சென்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில் போலீசார் சுக்வீந்தர் சிங்கின் வீட்டிற்குள் நுழைந்தபோது, போலீசார் மீது சுக்வீந்தர் சிங் துப்பாக்கிச் சுடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் கான்ஸ்டபிள் அம்ரித்பால் சிங்கின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனிடையே குற்றவாளி சுக்வீந்தர் சிங் அங்கிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து காயமடைந்த அம்ரித்பால் சிங்கை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கான்ஸ்டபிள் அமிரித்பால் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தப்பியோடிய சுக்வீந்தர் சிங்கை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story