'மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும்' - ஜெய்ராம் ரமேஷ்


மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முன்னிலைப்படுத்தும் - ஜெய்ராம் ரமேஷ்
x
தினத்தந்தி 13 Jan 2024 2:54 PM GMT (Updated: 14 Jan 2024 9:37 AM GMT)

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை நடத்த ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார்.

இதன்படி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை வருகிற 14-ந்தேதி(நாளை) ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'மோடி அரசின் 10 ஆண்டு கால அநியாயங்களை ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அம்பலப்படுத்தும்' என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"ராகுல் காந்தி நாளை தொடங்க உள்ள 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை', நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால அநியாயங்கள் முன்னிலைப்படுத்தும். இந்த யாத்திரை தேர்தலுக்கானது அல்ல. இது கொள்கை ரீதியிலானது.

'அமிர்த காலம்' குறித்த கனவுகளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார். ஆனால் கடந்த 10 வருடங்களின் உண்மை நிலவரம் என்ன? அது ஓர் அநியாய காலம்.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இது ராகுல் காந்தியின் முந்தைய யாத்திரையைப் போல், மாற்றத்தை நிகழ்த்தும் யாத்திரையாக இருக்கும்."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.


Next Story