அசோக் கெலாட்டுக்கு வசுந்தரா தான் தலைவர் சோனியா காந்தி அல்ல - சச்சின் பைலட் கடும் தாக்கு


அசோக் கெலாட்டுக்கு வசுந்தரா தான் தலைவர் சோனியா காந்தி அல்ல - சச்சின் பைலட் கடும் தாக்கு
x

முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல என்றும், வசுந்தரா ராஜே தான் தலைவர்

புதுடெல்லி

ராஜஸ்தானில், முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், அசோக் கெலாட் அரசுக்கு எதிராக, துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டும், அவருக்கு ஆதரவான 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி உயர்த்தினர்.

வெளிமாநிலத்தில் முகாமிட்டிருந்த அந்த எம்.எல்.ஏ.க்களால் அசோக் கெலாட் அரசு கவிழும் நிலை எழுந்தது. காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டால், பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதேபோல், இப்போதும் சச்சின் பைலட் தலைமையில் அசோக் கெலாட் அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது.

இந்நிலையில், தோல்பூர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும் போது

"கடந்த 2020-ம் ஆண்டு எனது அரசை கவிழ்க்க மத்திய மந்திரிகள் அமித்ஷா, கஜேந்திரசிங் ஷெகாவத், தர்மேந்திர பிரதான் ஆகியோர் சதி செய்தனர். அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய 3 எம்.எல்.ஏ.க்கள்தான் இதுகுறித்து என்னை உஷார்படுத்தினர். ஆனால், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் சபாநாயகர் கைலாஷ் மேக்வால் ஆகியோர் ஆதரவு தர மறுத்துவிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணபலத்தை பயன்படுத்தி கவிழ்ப்பது ராஜஸ்தான் கலாசாரம் அல்ல என்று அவர்கள் கூறிவிட்டனர்.

இதேபோல், முன்பு, ராஜஸ்தானில், பைரோன்சிங் ஷெகாவத் தலைமையில் பா.ஜனதா அரசு நடந்து வந்தபோது, பா.ஜனதாவில் ஒரு பிரிவினர் ஆட்சியை கவிழ்க்க முயன்றனர்.

அப்போது, ஷெகாவத், கவலைக்கிடமான நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். நான் நினைத்திருந்தால், அவரது ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பது நியாயம் அல்ல என்று அதற்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டேன்.

அதே கருத்தைத்தான் வசுந்தரா ராஜேவும், கைலாஷ் மேக்வாலும் இப்போது தெரிவித்தனர். அதனால் எனது அரசு கவிழாமல் தப்பியது.

இதுபோல், ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடந்தபோது, பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ஷோபா ராணி குஷ்வா, கட்சி மாறி, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். அது, பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதனால் அவரை பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.

ஷோபாராணி துணிச்சலான பெண்மணி. தன் மனசாட்சிப்படி அவர் வாக்களித்தார். அதனால் எனது அரசு காப்பாற்றப்பட்டது. என் வாழ்க்கையில் இச்சம்பவத்தை மறக்க மாட்டேன்.

அமித்ஷாவிடம் வாங்கிய பணத்தை அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் திருப்பி தரவில்லை. இதனால் அவர்கள் ஆட்சியை கவிழ்க்க அமித்ஷாவின் நிர்ப்பந்தத்தில் இருக்க வேண்டி இருக்கும்.

மத்திய உள்துறை மந்திரி. அவர் மிரட்டுவார். மராட்டியத்தில் சிவசேனா கட்சியை உடைத்தவர். எனவே, அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுமாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிம் கூறியுள்ளேன்.

அந்த பணத்தில் ஏதாவது செலவழித்து இருந்தால், அதை நான் கொடுக்கிறேன் அல்லது மேலிடத்திடம் இருந்து வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் என்று கூறினார்.

இதற்கு சச்சின் பைலட் இன்று பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல என்றும், வசுந்தரா ராஜே தான் தலைவர் என்றும் நினைக்கிறேன். அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.

முதல்முறையாக, யாரோ ஒருவர் தங்கள் சொந்தக் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை விமர்சிப்பதை நான் பார்க்கிறேன். பாஜக தலைவர்களை புகழ்வதும், காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பதும் எனது புரிதலுக்கு அப்பாற்பட்டது, இது முற்றிலும் தவறானது என்று சச்சின் பைலட் கூறியுள்ளார்.


Next Story