ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை


ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Sep 2023 9:42 PM GMT (Updated: 5 Sep 2023 9:43 PM GMT)

மைசூரு தங்கும் விடுதியில் பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு:-

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி

பெங்களூரு ஆர்.எஸ்.ஆர். காலனியை சேர்ந்தவர் ஜெரால்டு கொரியா (வயது 67). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார்். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெரால்டு மைசூருவுக்கு சென்றார். பின்னர் பி.என்.ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் அவர் அறை எடுத்து தங்கினார். இந்தநிலையில் ஜெரால்டு, தனது சகோதரர் சரள் குமாருக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில், தான் (ஜெரால்டு) பணப்பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரள்குமார் இதுகுறித்து லஸ்கர் மொஹல்லா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் ஜெரால்டு தங்கி இருந்த விடுதிக்கு சென்றனர்.

தற்கொலை

அங்கு அவரின் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஜெரால்டு, தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே விடுதியின் அறையில் ஜெரால்டு கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், பெங்களூருவை சேர்ந்த பாபு மகேந்திரா, மினி தாமஸ் ஆகியோருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் வாங்கிய பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் நான் (ஜெரால்டு) தற்கொலை செய்து கொள்கிறேன், என இருந்தது. இதுகுறித்து லஸ்கர் மொஹல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தற்கொலை வழக்கில் தொடர்புடைய மகேந்திரா, மினி தாமஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story