தெலுங்கானா முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்பு..!!


தெலுங்கானா முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்பு..!!
x

தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலம் உதயமானது முதல், அங்கு பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து தெலுங்கானாவின் 3-வது சட்டசபைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவின் புதிய முதல்-மந்திரியாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி நாளை (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் பதவியேற்கிறார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இதை நேற்று அறிவித்த பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 'கட்சியின் தேர்தல் பார்வையாளர்களின் அறிக்கையின் அடிப்படையிலும், மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் முடிவிலும், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவராக ரேவந்த் ரெட்டியை நியமிப்பது என கட்சித் தலைவர் முடிவு செய்துள்ளார்' என்றார்.

ரேவந்த் ரெட்டியுடன் நாளை எத்தனை மந்திரிகள் பதவியேற்பார்கள், துணை முதல்-மந்திரிகள் யாரும் இடம்பெறுவார்களா என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

கே.சி.வேணுகோபாலின் அறிவிப்பின்போது, கர்நாடக துணை முதல்-மந்திரியும், கட்சியின் தெலுங்கானா தேர்தல் பார்வையாளருமான டி.கே.சிவக்குமார், மற்றொரு பார்வையாளரும், பொறுப்பு பொதுச்செயலாளருமான மானிக்ராவ் தாக்கரே ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story