கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான அன்றே ரூ.35.5 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிரடி


கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான அன்றே ரூ.35.5 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிரடி
x
தினத்தந்தி 29 March 2023 10:53 AM GMT (Updated: 29 March 2023 10:53 AM GMT)

கர்நாடகா சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை இன்று ரூ.35.5 லட்சம் பணம் பறிமுதல் செய்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதன்படி, வருகிற மே 10-ந்தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. இதன்படி, புதிய திட்டங்களை அரசு அறிவிப்பதோ, அரசு செலவில் வெளியிடவோ தடை விதிக்கப்படுகிறது.

24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்படும். அரசியல் கட்சிகள் பேரணி, பிரச்சார கூட்டங்களை முன்அனுமதி பெற்று நடத்த வேண்டும். அதற்கு, காவல் துறையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெற வேண்டும்.

நகரங்களில் சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாது என்பதனால், சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். எனினும், ஊரக பகுதிகளில் கட்டிட உரிமையாளரின் ஒப்புதலுடன் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், கட்சி அறிவிப்பு பலகைகள், சுவரொட்டிகள் ஆகியவையும் அறக்கப்படும். இதுபோன்ற சூழலில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை கர்நாடகாவில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

இதில், செடாம் பகுதியில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் வந்த காரை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.35.5 லட்சம் ரொக்க பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் அறிவிப்பு வெளியான அன்றைய தினத்திலேயே இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.


Next Story