பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்


பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்
x

கோப்புப்படம்

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

பானிப்பட்,

அரியானா மாநிலம், பானிப்பட்டில் ரூ.900 கோடி மதிப்பில் 2-ம் தலைமுறை எத்தனால் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஆலையை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு பொருள். நமக்கு உயிரி எரிபொருள் என்பதன் பொருள், பசுமை எரிபொருள், சுற்றுச்சூழலை காக்கும் எரிபொருள் என்பதாகும். இந்த நவீன ஆலையை நிறுவியதின் மூலம் அரிசி, கோதுமை அதிகமாக விளையும் அரியானாவில் விவசாயிகள், பயிர் கழிவுகளை பயன்படுத்துவதற்கான மற்றொரு லாபகரமான வழியைப் பெறுவார்கள்.

ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பு

பெட்ரோலில் எத்தனாலை கலப்பதால் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி வெளிநாட்டுக்கு செல்வதில் இருந்து சேமிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலப்பதால் அதே தொகை நமது விவசாயிகளுக்கு போய்ச்சேர்ந்துள்ளது.

இந்த ஆலை அரியானா, டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும். இந்த ஆலை ஆண்டுக்கு 3 கோடி லிட்டர் எத்தனாலை தயாரிக்க 2 லட்சம் டன் வைக்கோலை பயன்படுத்தும். இதனால் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தையும் குறைக்கும்.

அரசியலில் சுயநலம் இருந்தால், யாரேனும் வந்து இலவச பெட்ரோல், டீசல் தருவதாக அறிவிக்கலாம். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள், நமது குழந்தைகளின் உரிமையைப் பறித்து விடும். நமது நாடு தற்சார்பு நாடாக மாறுவதை தடுக்கும். இத்தகைய சுயநல கொள்கைகளால், நாட்டில் நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும்.

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளிப்பதற்கு, தெளிவான நோக்கங்களும், உறுதிப்பாடும் அவசியம். இதற்கு மிகக்கடினமான உழைப்பும், கொள்கையும், திரளான முதலீடுகளும் வேண்டும்.

கருப்பு மாயாஜாலம் எல்லாம் மோசமான நாட்களை முடிவுக்கு கொண்டு வந்துவிடாது. இவர்கள் எல்லாம் கருப்பு உடைகளை அணிவதால் தங்கள் விரக்தியை முடிவுக்கு கொணடு வந்து விடலாம் என கருதுகிறார்கள். ஆனால் மாந்திரீகத்தாலோ, சூனியத்தாலோ, மூட நம்பிக்கையாலோ மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியாது என்று அவர் கூறினார்.


Next Story