ரூ.8 கோடி பிடிபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகனுக்கு பத்ம பூஷண் விருது வழங்குவார்கள்: கெஜ்ரிவால் காட்டம்


ரூ.8 கோடி பிடிபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகனுக்கு பத்ம பூஷண் விருது வழங்குவார்கள்: கெஜ்ரிவால் காட்டம்
x

ஊழல்வாதி என கூறி சிசோடியாவிடம் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம் மட்டுமே கைப்பற்றினர் என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



புதுடெல்லி.


டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானார்.

அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணை முடிவில், சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வரும் 4-ந்தேதி (இன்று) வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால், சிசோடியா சி.பி.ஐ. காவலில் உள்ளார்.

சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. எனினும், சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிரான சிசோடியாவின் மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, சட்ட பிரிவு 32-ன் கீழ் மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது என தெரிவித்தது.

டெல்லியில் சம்பவம் நடந்திருக்கும்போது, சிசோடியா நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு வர முடியாது என்றும், அவருக்கான தீர்வுகள், விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி ஐகோர்ட்டிலேயே உள்ளன என்றும் அமர்வு தெரிவித்து உள்ளது. அதனால், மாற்று தீர்வை காணும்படியும் கேட்டு கொண்டது. தொடர்ந்து மனுவை, சிசோடியாவின் வழக்கறிஞர் சிங்வி வாபஸ் பெற்று கொண்டார்.

இதனால், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு செய்து உள்ளது. இந்நிலையில், மந்திரி பதவியில் இருந்து சிசோடியா விலகினார். இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு முன்னாள் மந்திரி மணீஷ் சிசோடியா எழுதியுள்ள பதவி விலகல் கடிதத்தில், உலகில் எந்த சக்தியும் நேர்மையற்ற முறையில் என்னை பணியாற்றும்படி செய்து விட முடியாது.

நேர்மையாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய பின்னர் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசம் என தெரிவித்து உள்ளார். சிசோடியா கைது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மேகன் கூறும்போது, உண்மைகள் தெளிவாக தெரிகின்ற இந்த ஊழல் வழக்கில் சிசோடியா கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த வழக்குடன் உள்ள தொடர்புக்காக கெஜ்ரிவாலையும் கைது செய்ய வேண்டும் என கூறினார். பா.ஜ.க.வும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் பதவி விலகல் எப்போது? என கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் மகன் பிரசாந்த் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம், அவருக்கே ஒப்பந்தம் கிடைக்க ஏதுவாக, ரூ.80 லட்சம் லஞ்சம் கேட்டு, அவற்றில் முதல் தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிரசாந்த் உள்பட 5 பேர் லோக் அயுக்தாவிடம் சிக்கினர்.

ரூ.40 லட்சம் லஞ்ச விவகாரம் என நினைத்து எம்.எல்.ஏ.வின் மகன் வீடு, அலுவலகத்தில் லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் சிக்கியது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறும்போது, அவர்களது மந்திரிகளில் ஒருவரின் மகனிடம் ரூ.8 கோடி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், அவரை இன்னும் கைது செய்யவில்லை. ஒருவேளை அவருக்கு அடுத்த ஆண்டில், அவர்கள் பத்ம பூஷண் விருது வழங்கலாம். மந்திரியின் மகனிடம் இருந்து ரூ.8 கோடி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், மணீஷ் சிசோடியாவை கைது செய்து இருக்கிறார்கள்.

அவர்கள் சிசோடியாவை ஊழல் செய்தவர் என கூறினார்கள். ஆனால், சிசோடியாவிடம் நடந்த சோதனையில், ரூ.10 ஆயிரம் மட்டுமே அவரிடம் இருந்து உள்ளது. சிசோடியாவின் வங்கி லாக்கரில் கூட எதுவும் கண்டறியப்படவில்லை என டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Next Story