சனாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு - நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


சனாதன விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு - நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

சனாதன விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் புதிய மனுவையும் இணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டுகளில் 40 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க டெல்லி காவல் ஆணையருக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். அதோடு சனாதன விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் இந்த புதிய மனுவையும் இணைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story