ஜூலை 26-ம் தேதி சத்தியாகிரக போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு


ஜூலை 26-ம் தேதி சத்தியாகிரக போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 July 2022 4:21 PM GMT (Updated: 24 July 2022 4:30 PM GMT)

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கிய 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கிய 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்தது. அதைத்திருப்பி செலுத்தாத நிலையில், அந்த பத்திரிகை நிறுவனத்தை ('அசோசியேட்டட் ஜர்னல்ஸ்') காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.

இதனால் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகளை 'யங் இந்தியா' அபகரித்து விட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்து அது டெல்லி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இதில் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்ட விரோத பண பரிமாற்றம் பற்றி அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது. இதில் ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் 50 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

75 வயதான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 2 முறை முதலில் சம்மன் அனுப்பியும் அவர் கொரோனா தொற்றால் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து அவர் (21-ந்தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய சம்மன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து டெல்லி அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு விசாரணைக்காக சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருடனும், வந்தார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். சோனியா காந்தியிடம் விசாரணை முடிவடையாத நிலையில் மீண்டும் 25-ந்தேதி விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில், சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 26-ல் சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜூலை 26-ல் சோனியாகாந்தி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் போரட்டத்தில் பங்கேற்கின்றனர்.


Next Story