உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்


உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
x

17 வயதுக்கு உள்பட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் அக்கரை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

டெல்லி,

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், பெண்கள் உலகக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா நேற்று தற்காலிகமாக ரத்து செய்தது. பிபா-வின் இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்த தேர்தல் மற்றும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

இதனிடையே, 3-ம் நபரின் தலையீடு உள்ளதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்தது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தை வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட், போபன்னா மற்றும் பரிட்வாலா பார்வைக்கு கொண்டுவந்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

3 நீதிபதிகள் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு பிபா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 17 வயதுக்கு உள்பட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் அக்கரை. இந்த விவகாரத்தில் வெளிநபர்கள் யாரேனும் தலையிட நினைத்தால், கோர்ட்டு சகித்துக்கொண்டு இருக்காது' என்றனர்.

பெண்கள் உலகக்கோப்பை இந்தியாவில் நடத்தவும், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை நீக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 22-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலும் படிக்க... உலகக்கோப்பை கால்பந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு; உரிமத்தையே ரத்து செய்த பிபா - அதிர்ச்சி பின்னணி


Next Story