தெலுங்கானாவில் சீனியர் ராகிங்; தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி மரணம்


தெலுங்கானாவில் சீனியர் ராகிங்; தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி மரணம்
x

தெலுங்கானாவில் ராகிங் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற இளநிலை மருத்துவ மாணவி உயிரிழந்து உள்ளார்.



வாரங்கால்,


தெலுங்கானாவின் வாரங்கால் மாவட்டத்தில் காகத்தியா மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் பிரீத்தி. இளநிலை மருத்துவராகவும் இருந்து உள்ளார். இந்நிலையில், கடந்த 22-ந்தேதி அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஐதராபாத் நகரில் உள்ள நிம்ஸ் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.10 மணியளவில் உயிரிழந்து உள்ளார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

இதுபற்றி வாரங்கால் காவல் துறை ஆணையாளர் ரங்கநாத் கூறும்போது, காகத்தியா மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவியான பிரீத்தி, கடைசியாக அவசர சிகிச்சை பரிவில் பணியில் இருந்து உள்ளார்.

அதன்பின்னர், மற்ற டாக்டர்களிடம் தனக்கு தலை வலி மற்றும் வயிறு வலி ஏற்பட்டு உள்ளது என கூறி விட்டு தனது அறைக்கு புறப்பட்டார். அதன்பின்பு, அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில், எம்.ஜே.எம். மருத்துவமனையின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சமூக ஊடகம் மற்றும் அவர்கள் இருவருக்கு இடையேயான தனிப்பட்ட சாட்டிங்குகளை ஆய்வு செய்ததில், பிரீத்தி ராகிங் கொடுமைக்கு ஆளானது தெரிய வந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த மாணவர் மீது ராகிங்குக்கு எதிரான வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை வந்த பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

பிரீத்தி, கடந்த சில நாட்களாக மூத்த ஆண் மருத்துவர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். அதனாலேயே இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார் என பிரீத்தியின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். எனினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.


Next Story