நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி
x

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மோடி பேட்டி

இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதிய இலக்கை நோக்கி...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்ல இருக்கிறோம். விநாயக பெருமானுக்கு 'விக்னஹர்தா' என்றும் பெயர், இனி இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இருக்காது. பழைய வருத்தங்கள், புகார்களை புறந்தள்ளி உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும்.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறுகிய காலமாக இருக்கலாம். ஆனால் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ள கூட்டத்தொடர். இந்த கூட்டத்தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டு கால பயணத்தில் இருந்து புதிய இலக்கை நோக்கி செல்வதாகும்.

ஆக்கப்பூர்வ பங்களிப்பு

இது ஒரு குறுகிய அமர்வு. ஆயினும் எம்.பி.க்கள் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும். அதிகபட்ச நேரத்தை ஒதுக்க வேண்டும். அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை தர வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும்.

சந்திரயான்-3 விண்கலம் இந்திய மூவர்ண கொடியை நிலவில் நிலைநாட்டி உள்ளது. இதுபோன்ற சாதனையை நிகழ்த்தும்போது, அது நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது.இந்த வெற்றியின் மூலம் பல வாய்ப்புகளும், சாத்தியங்களும் இந்தியாவின் கதவுகளை தட்டுகின்றன.

வளர்ந்த நாடாக...

ஜி20 உச்சி மாநாடு வெற்றியின் மூலம் உலக அளவில் தென்பிராந்தியத்தின் குரலாக இந்தியா மாறி இருக்கிறது. பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜி20 மாநாடு நடைபெற்று உள்ளது. ஏழை நாடுகளின் குரலை பிரதிபலித்ததில் பெருமைப்படுகிறேன். அனைத்து நிகழ்வுகளும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை எடுத்துக்காட்டுகின்றன.

புதிய நாடாளுமன்றத்தில் இருந்து பயணத்தை முன்னெடுத்து செல்லும் போது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக வரும் காலத்தின் அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்திற்காக டெல்லியில் குவிந்துள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் தலைவர்கள், நேற்று காலையில் தனியாக கூடி, சிறப்பு கூட்டத்தொடர் குறித்து விவாதித்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலக அறையில் இந்த சந்திப்பு நடந்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஐந்து நாள் அமர்வின் போது கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதென்றும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் வன்முறை மற்றும் எல்லையில் சீன அத்துமீறல்கள் போன்ற பிரச்சினைகளில் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் அதானி குழும விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, பொருளாதார நிலை, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு குறித்து விவாதிப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரதமருக்கு சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் குறித்து பட்டியல் அனுப்பி உள்ளார். அதிலும் விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, மத்திய மாநில உறவுமுறை சிக்கல்கள், சீன அத்துமீறல் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன.

கூச்சல் குழப்பம்

இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே நேற்றைய கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் தொடங்கியது. நாடாளுமன்ற பழைய கட்டிடம் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை சபாநாயகர் ஓம் பிர்லா எடுத்து கூறினார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற 75 ஆண்டு கால பயணத்தை பற்றி பிரதமர் மோடி பேசினார்.

மாலை வரை பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இது போல மாநிலங்களவையிலும் கடந்த காலத்தில் தலைவர்கள் ஆற்றியுள்ள பணிகளை உறுப்பினர்கள் எடுத்து கூறினார்கள்.

இன்று அனல் பறக்கும்

பின்னர் இரு அவைகளும் நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை மதியம் 1.15-க்கும், மாநிலங்களவை மதியம் 2.15 மணிக்கும் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாரத் பெயர் மாற்ற விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற எதிர்பாராத முக்கிய முடிவுகள் குறித்த மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் சிறப்பு கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story