காஷ்மீர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு


காஷ்மீர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு
x

காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

பனிகால்,

காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்துக்கு உட்பட்ட பலிகோட்டில் செயின் சிங் (வயது 67) என்பவர் தனது மனைவி சங்ரி தேவி (62), மகள்கள் சோனிகா தேவி (40), டெஷா தேவி (30) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர்களது மண் வீட்டில் நேற்று ஆட்கள் நடமாட்டம் தென்படாததால், அக்கம்பக்கத்தினர் சிங்கின் வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது சோனிகா தேவியை தவிர மீதமுள்ள 3 பேரும் பிணமாக கிடந்தனர். மயக்க நிலையில் கிடந்த சோனிகாவும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பனியால் மூடப்பட்ட வீட்டுக்குள் பிணமாக கிடந்த இவர்கள் 4 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.

அத்துடன் அவர்கள் வளர்த்து வந்த சில விலங்குகளும் இறந்து கிடந்தன. எனவே இந்த பரிதாப சம்பவத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் எதுவும் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காஷ்மீரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story