சைலேந்திரபாபு 30-ந்தேதி ஓய்வு: தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. யார்..?


சைலேந்திரபாபு 30-ந்தேதி ஓய்வு: தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. யார்..?
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்காக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் சைலேந்திரபாபு. 1987-ம் ஆண்டின் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற 30-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

13 பேரின் பெயர்கள் பரிந்துரை

மாநிலங்களில் புதிய டி.ஜி.பி. நியமனத்தைப் பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஆலோசனை பெறப்பட வேண்டும். இதன்படி டி.ஜி.பி.க்கு தகுதியானவர்களின் பட்டியலை மாநில அரசு, குடிமைப்பணிகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும். அந்த பட்டியலில் 3 பேரை குடிமைப்பணிகள் ஆணையம் தேர்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை மாநில அரசு நியமித்துக்கொள்ளும்.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அடுத்த டி.ஜி.பி.க்கான தகுதியானோரின் பட்டியல் தமிழ்நாடு அரசு சார்பில், மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா மற்றும் பிராஜ்கிஷோர் ரவி, ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால், அம்ரேஷ் பூஜாரி, ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் உள்ளிட்ட 13 பேர் பெயர் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது.

ஆலோசனை கூட்டம்

இவர்களில் தகுதியான 3 பேரை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடிமைப்பணிகள் ஆணைய உயர் அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் குடிமைப்பணிகள் ஆணையம் 3 அதிகாரிகளின் பெயரை தேர்வு செய்து இன்னும் ஓரிரு நாளில் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கும் என தெரிகிறது. அதில் ஒருவர் டி.ஜி.பி.யாக அறிவிக்கப்படுவார்.

டி.ஜி.பி. பதவிக்கு புதியவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று இல்லை. டி.ஜி.பி.யின் பதவிக்காலம் முடிந்தாலும் சில நியாயமான காரணங்களுக்காக அவரை பணியில் தொடர வைக்கலாம் என மாநில அரசுகள் பரிந்துரைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story