மராட்டியத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் பரபரப்பு ஆடியோ வைரல்


மராட்டியத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் பரபரப்பு ஆடியோ வைரல்
x
தினத்தந்தி 9 Jun 2023 9:00 PM GMT (Updated: 9 Jun 2023 9:00 PM GMT)

மராட்டியத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருக்கு சமூக செயல்பட்டாளரும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட அதே கதி விரைவில் ஏற்படும் என்று மிரட்டலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் கொலை மிரட்டல் குறித்த ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர். மூடநம்பிக்கைக்கு எதிராக போராடி வந்த நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேயில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரத்பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எனக்கும் நேற்று முதல் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. இதில் பேசியவர்கள் காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டாம் என மிரட்டினர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் மற்றும் மாநில உள்துறை மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

இந்தநிலையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷில்பா போட்கே கொலை மிரட்டல் ஆடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், "சஞ்சய் ராவத் தனது காலை செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்தவேண்டும். இல்லையெனில் அவர் சுட்டுக்கொல்லப்படுவார். ஒரு மாதத்திற்குள் சகோதரர்கள் (சஞ்சய் ராவத் மற்றும் அவரது தம்பி சுனில் ராவத்) இருவரையும் சுடுகாட்டுக்கு அனுப்புவேன்" என்று மர்ம நபர் கூறுகிறார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சஞ்சய் ராவத்தின், சகோதரரான சுனில் ராவத் கூறுகையில் "இந்த மிரட்டல் அழைப்புகள் விவகாரத்தில் அரசு தீவிரமாக இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலை கூட பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

மராட்டியத்தில் தற்போது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story