ராஜ் தாக்கரேவை தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசிய ஷிண்டே


ராஜ் தாக்கரேவை தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசிய ஷிண்டே
x

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை, சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.



புனே,



மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு உள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கூட்டணி மீது அதிருப்தி தெரிவித்ததுடன், கூட்டணியை விட்டு வெளியே வரும்படி சிவசேனாவுக்கு ஷிண்டே அழைப்பு விடுத்து உள்ளார்.

கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை பதவியில் அமர்த்த முடிவாகி உள்ளது. ஷிண்டே, மொத்தமுள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் தனக்கு ஆதரவாக உள்ளனர். தவிர 12 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உடன் உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா மற்றும் அதன் தொண்டர்களை விடுவிக்க நான் விரும்புகிறேன் என்பதனை சிவசேனா தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே நான் போராடி வருகிறேன். இந்த போரானது, கட்சி தொண்டர்களின் முன்னேற்றத்திற்காக என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர்களில் ஒருவர் இன்று கூறும்போது, சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரேவை தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசினார். இதில், மராட்டியத்தின் சமீபத்திய அரசியல் சூழல் மற்றும் ராஜ் தாக்கரேவின் உடல்நிலை ஆகியவை பற்றி கேட்டறிந்து உள்ளார் என தெரிவித்து உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது, சஸ்பெண்டு செய்வது, முக்கிய பொறுப்புகளில் இருந்து விடுவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் அவர்கள் மீது அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வருகின்றன.


Next Story