ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி


ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 29 Oct 2023 4:49 PM GMT (Updated: 30 Oct 2023 12:40 AM GMT)

ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விஜயநகரம்,

விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் பலாசா ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் ரெயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அலறினர். ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரெயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிரமங்கள் நிலவுகிறது. பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரெயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்ததாக ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டக பள்ளி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ரெயில்கள் விபத்து குறித்து முதல் மந்திரி அதிர்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, காயம் அடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசாவில் கடந்த ஜுன் மாதம் 2 ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த ரெயில் விபத்தில் 280 பேர் பலியாகினர். இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான ரெயில் விபத்துக்களில் ஒன்றாக ஒடிசாவின் பாலாசோர் ரயில் விபத்து அமைந்தது. ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ஏற்படுத்திய ரணமே மக்கள் மத்தியில் இன்னும் முழுமையாக அகலாத நிலையில், ஆந்திராவில் இன்று இந்த ரெயில் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story