உ.பி.யில் அதிர்ச்சி; பிரம்ம குமாரி சகோதரிகள் 2 பேர் தற்கொலை


உ.பி.யில் அதிர்ச்சி; பிரம்ம குமாரி சகோதரிகள் 2 பேர் தற்கொலை
x

3 பக்க தற்கொலை கடிதத்தில், ஆசிரமத்தின் 4 ஊழியர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டனர் என தெரிவித்து உள்ளனர்.

ஆக்ரா,

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் பிரம்ம குமாரிகளுக்கான ஆசிரமம் ஒன்று உள்ளது. இதில் உறுப்பினர்களாக இருந்த 2 பெண்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட போலீசார் சம்பவ பகுதிக்கு உடனே சென்று அவர்கள் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி காவல் உயரதிகாரி மகேஷ் குமார் கூறும்போது, அந்த இடத்தில் இருந்து, தற்கொலை குறிப்புகள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த குறிப்பில் ஆசிரமத்தின் 4 ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன என கூறினார்.

ஏக்தா (வயது 38) மற்றும் ஷிக்கா (வயது 32) ஆகிய இந்த இரண்டு பெண்களும் ஆசிரமத்தில் ஓராண்டாக தங்கியிருந்தனர். அவர்கள் எழுதிய 3 பக்க தற்கொலை கடிதத்தில், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசிரமத்தின் 4 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அவர்களுடைய ரூ.25 லட்சம் பணமும் மோசடி செய்யப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு அவர்கள் இருவரும் விடுத்த வேண்டுகோளில், ராஜஸ்தானில் ஆசிரமத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசராமை போன்று, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.


Next Story