ஷிராடி சுரங்கப்பாதை பணிகள் விரைவில் தொடக்கம்; மந்திரி சதீஷ் ஜார்கிகோளி பேட்டி


ஷிராடி சுரங்கப்பாதை பணிகள் விரைவில் தொடக்கம்; மந்திரி சதீஷ் ஜார்கிகோளி பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2023 9:40 PM GMT (Updated: 25 Jun 2023 11:17 AM GMT)

ஷிராடி சுரங்கப்பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி சதீஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.

ஹாசன்:

ஷிராடி சுரங்கப்பாதை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி சதீஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதை பணிகள்

பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை 72-ல் உள்ள ஷிராடி சுரங்கப்பாதை பணிகளை பொதுப்பணித்துறை மந்திரி சதீஷ் ஜார்கிகோளி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த சதீஷ் ஜார்கிகோளி கூறியதாவது:-

ஷிராடி சுரங்கப்பாதையில் சோதனை ஒட்டத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். இந்த சாலை பணிகள் குறித்து மத்திய மந்திரியிடம் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

இதற்காக நாளை(இன்று) நான் டெல்லி செல்ல இருக்கிறேன். இந்த ஷிராடி சுரங்கப்பாதை மாரானா கிராமத்தில் இருந்து கூண்டி கிராமம் வரையில் 30 கி.மீ தூரத்துக்கு சுரங்கபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 சுரங்கப்பாதைகள் 3.5 கி.மீ தூரமும், ஒரு மேம்பாலம் 10 கி.மீ தூரமும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு பயனுள்ளது

இதற்காக வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டியுள்ளது. அவர்கள் அனுமதி அளித்த பின்னர் எந்த பாதையில் சாலைகள் அமைக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும். இதற்காக வனத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதற்கு முன்னதாக மத்திய அரசு இந்த சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும். அதன்பின்னர் மாநில அரசின் ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்கும்.

இந்த புதிய சாலையின் மூலம் பயண போக்குவரத்து நேரம் குறையும். மழை நேரங்களில் இந்த சாலை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சாலை வழியாக பயணித்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. முற்றிலும் பாதுகாப்பான சாலையாக இவை அமைக்கப்பட இருக்கிறது. பணிகள் முடிந்த பின்னர் இந்த சாலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story