சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவது எப்போது? - துல்லியமாக நேரத்தை கூறிய இஸ்ரோ தலைவர்


தினத்தந்தி 14 July 2023 2:30 PM GMT (Updated: 14 July 2023 2:33 PM GMT)

நிலவில் சந்திரயான் விண்கலம் எப்போது தரையிறங்கும் என்பதை குறித்த நேரத்தை இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திரயான் - 3 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவை ஆராய இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட்டது.

நிலவில் தரையிறங்கிய உடன் விண்கலத்தில் இருந்து ரோவர் நிலவில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. சந்திரயான் விண்கலம் - 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். முன்னதாக, 2019ம் ஆண்டும் இதே நோக்கத்தோடு இஸ்ரோ சந்திரயான் - 2 திட்டத்தை செயல்படுத்தியது.

ஆனால், சந்திரயான் 2 திட்டத்தின் போது நிலவில் தரையிறங்கும்போது விண்கலம் நிலவில் மோதியது. இதனால் தரையிறக்கம் தோல்வியடைந்தது. தற்போது இந்தியா மீண்டும் அதே முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முறை நிலவில் தரையிறங்கும் முயற்சியில் இஸ்ரோ நிச்சயம் வெற்றிபெறும் என நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் எப்போது நிலவில் தரையிறங்கும் என்ற நேரத்தை இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சந்திரயான் 3 விண்கலத்தை அடுத்த மாதம் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.


Next Story