கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் ; பெங்களூருவில் 144 தடை உத்தரவு


கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய பந்த் ; பெங்களூருவில் 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 28 Sep 2023 10:48 AM GMT (Updated: 28 Sep 2023 11:21 AM GMT)

கர்நாடகாவில் நாளை மாநில தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. முன்னதாக நேற்று முன்தினம் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாளை மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊர்வலம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்த் என்ற பெயரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் பந்த் நடத்துபவர்களே பொறுப்பு என்று அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் நாளை பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story