மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா


மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா
x

மத்திய அரசு வழங்கும் நிதியை சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பதாகவும் மன்சுக் மாண்டவியா கூறினார்.

புதுடெல்லி,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கலந்துரையாடினார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரிபுரா முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவ், டெல்லி சுகாதாரத்துறை மந்திரி மணிஷ் சிசோடியா, புதுச்சேரி முதல்-மந்திரி என். ரங்கசாமி உட்பட பல்வேறு மாநில மந்திரிகள் கலந்து கொண்டனர்.

தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், 15-வது நிதி ஆணைய மானியங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்குவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றும், இதற்காக மத்திய அரசு வழங்கும் நிதியை, சில மாநிலங்கள் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பதாகவும் மன்சுக் மாண்டவியா கூறினார். மத்திய அரசின் நிதியை மாநிலங்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Next Story