நித்யானந்தா சிலைகளை வைத்து நடைபெற்ற பூஜையால் பரபரப்பு


நித்யானந்தா சிலைகளை வைத்து நடைபெற்ற பூஜையால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2022 5:15 AM GMT (Updated: 11 Jun 2022 5:29 AM GMT)

கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன.

அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.


இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பினர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.

சித்ரா நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அவர் தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும். அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என பதிவிட்டுள்ளனர்.

இதற்கிடையே நித்யானந்தாவின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டு அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கைலாசா உரிய விளக்கம் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story